21 April 2020



என்னைத் தவிர அவர்களுக்கு பிரதானமான காரணம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் திருமணத்தில் பங்கெடுக்காமல் பாதியில் சென்றதர்க்கு நாந்தான் காரணம் என்பது எனது ஊகம்.



அது உண்மையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பின்னாளில் மற்றவர்களிடமும் என் தந்தையிடமும் அவர்கள் சொன்ன காரணம் எதுவும் அவ்வளவு வலுவாகவும் நம்பும்படியும் இல்லை. அர்ச்சனாவின் அத்தைகள் மூவரும் திருமணத்திற்கு வேண்டா வெருப்பாகத்தான் வந்திருக்கிறார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை. அது அவள் மேல் உள்ள பாசத்தினால் வந்திருப்பார்கள். இன்னொன்று வந்தே ஆகவேண்டும் என்பது முறை அதனால் வந்திருப்பார்கள். தனது அண்ணன் மகள் ஒரு பார்வைத் திறன் குறையுடையவனைத் திருமணம் செய்கிறாளே என்ற ஞாயமான கோபம் அவர்களுக்கு.

என்னதான் வங்கியில் நிரந்தர பணியில் இருந்தாலும், பார்ப்பதர்க்கு ஓரளவு சுமாராக இருந்தாலும், ஓரளவு வசதியாக இருந்தாலும், பார்த்துக்கொள்ள ஆட்கள் இருந்தாலும், அவர்களைப் பொருத்தவரையில் நான் பார்வைத் திறன் குறையுடையவந்தான். அதைக் காரணம் காட்டியே அவர்கள் வராமல் இருந்திருக்கமுடியும். ஆனால் பெண்ணுக்கு நெருங்கிய சொந்தம் என்பதால் திருமணத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம். இருந்தே ஆகவேண்டும் என்ற நிபந்தனை.

எப்படியோ திருமணத்திற்கு முந்தையநாள் இரவைக் கழித்துவிட்டார்கள். அடுத்தநாள் எங்கள் இருவருக்கும் எண்ணெய் நலங்கு அவர்கள்தான் வைத்தார்கள். பிறகு நாங்கள் இருவரும் மனையைச் சுற்றிவரவேண்டும்.
யோசித்துப் பார்த்தால் இந்த இடத்தில்தான் அவர்களின் மனம் மாறி இருக்கவேண்டும். நான் அர்ச்சனாவின் கையைப் பிடித்துக்கொண்டு சுற்றிவரவேண்டும். எனக்குமுன் என்னை ஒருவன் என் கையைப் பிடித்துக் கொண்டு வழிநடத்தி செல்லும் காட்சியை அவர்கள் கண் எதிரே பார்த்த அந்த கணம் அவர்களுக்கு வலி நிறைந்ததாகத்தான் இருந்திருக்கவேண்டும். சிறுவயதிலிருந்து தாம் பார்த்து வளர்ந்த ஒரு பெண்ணை கைபிடித்துக் கூட்டிச் செல்ல கூட அவளுக்கு வரப்போகும் கணவனுக்கு துப்பில்லைஎன்று நினைத்திருக்கக் கூடும். இல்லையென்றால் உடல்நலம் சரியில்லாத அந்தப் பாட்டியை அதுதான் அவர்களது அம்மாவை அந்த நிலையில் விட்டுவிட்டு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

எனது திருமணத்திற்கு முன்பு அந்தப் பாட்டிக்கு உண்மையிலேயே உடலில் பிரச்சனை இருக்கத்தான் செய்தது. அண்ணனின் திருமணத்தின்போதும் அந்தப் பாட்டி மொத்தமாகவெல்லாம் நடித்திருக்க மாட்டார் என்பது எனது நிலைப்பாடு. சாதாரன உடல் பிரச்சனை வந்திருக்கும் என்பதை நான் நிச்சையம் நம்புவேன். ஆனால் அதை மாறடைப்பு என்ற அளவிற்கு பெரிதாக பில்டப் செய்திருப்பார்கள்.

அந்தப் பாட்டிக்கு தனது சொந்தத்தில் தனது பேத்திகளை திருமணம் செய்வித்துக் கொள்ளவேண்டும் என்பது ஆசை. அதேபோல் அர்ச்சனாவின் மற்ற உரவினர்களுக்கு என்னைப் போன்றதொரு பார்வைத் திறன் குறையுடையவனை அவள் தேர்ந்தெடுப்பதில் விருப்பமில்லை. அதை கண் கூட பார்க்கும்போது விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியே சென்றிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு. அதை அவர்கள் வருங்காலத்தில் இல்லை என்று நிரூபித்தால் இதே வலைதலத்தில் அதர்க்காகவே ஒரு பதிவை எழுதி மண்ணிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

எது எப்படி இருந்தாலும் சரி. ஒரு பொது நிகழ்ச்சிக்கு குறிப்பாக திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வரும் உரவினர்கள் எவ்வளவு மனக்கசப்புகள் இருந்தாலும் உள்ள்ஏ வந்துவிட்டால் அந்த நிகழ்வு முடியும்வரை இருந்துவிட்டு செல்லவேண்டும் என்பதைத்தான் நாகரீகமாக நான் கருதுகிறேன். குறைந்தபட்சம் அர்ச்சனாவுக்காகவும் மாமாவுக்காகவுமாவது அவர்கள் அம்மாதிரியான செயலை செய்யாமல் இருந்திருக்கலாம்.

அவர்கள் சென்றிருந்த செய்தி கேட்ட சில நேரம் கழித்து அனைவரும் சகஜ நிலைக்கு வந்திருந்தோம். மண்டபத்தை விட்டு கோயிலுக்கும் கிளம்பவும் ஆயர்த்தமாகி இருந்தோம். என்னை ஐந்தே நிமிடத்தில் தயார் செய்திருந்தார் பாலாஜி அண்ணா. அர்ச்சனாவை தயார் செய்வதில்தான் கொஞ்சம் தாமதமாகி இருந்தது. அத்தையோடு சேர்ந்து எங்கள் பக்கத்து உரவினர்களான கஸ்தூரி மாமி சத்தியா மாமி மற்றும் சிலர் சேர்ந்து அவளை அலங்கரித்து முடித்திருந்தனர்.

எப்படியோ சுமார் ஐந்து முப்பத்தைந்து மணி அளவில் அனைவரும் கிளம்பி இருந்தோம். புரோகிதர் சொன்ன நேரத்தைக் கடந்திருந்ததால் பாதபூஜைக்கு வாய்ப்பில்லை என்று நினைத்தோம். என்னை புது செருப்பு, புது வேட்டி, புது சட்டை, தலையில் தொப்பி மாதிரியான ஒன்றை அணிவித்து ரோட்டில் இறக்கி நடக்கவைத்து அழைத்துசென்றிருந்தனர். கண்ணாடி மட்டும் பழையது. தவிர கையில் ஏதோ பூச்செண்டு மாதிரி ஒன்றை கொடுத்தனர். தலையில் அணிந்திருப்பது ராஜாக்கள் அனியும் தொப்பியாம். கையில் இருப்பது ராஜாக்கள் கையில் இருப்பது போன்ற கோளாம். அதை கடைசிவரை ஒரு கையில் பிடித்துக்கொண்டே இருக்கவேண்டுமாம்.

வேனு சித்தப்பாதான் என் கையை பிடித்துக்கொண்டு கோவில்வரை வந்ததாக ஞாபகம். ஒருவழியாக கோவிலின் வாசலில் வந்து நின்றோம். திருமணத்திற்கு முந்தையநாள் நானும் சந்தோஷும் சென்றபோது சாதாரனமாக தெரிந்த அந்த திருக்கோவில் நான் திருமணத்தன்று சென்று அதன் வாசலில் நின்றபோது வித்தியாசமானதொரு உணர்வைத் தோற்றுவித்திருந்தது. வெளியில் நின்ற அந்த வெகுசில நொடிகள் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வை எனக்குள் அந்த திருக்கோவில் ஏற்படுத்தியது.

ஸ்ரி பள்ளிக்கொண்டேஷ்வரர் திருக்கோவில் சுருட்டப்பள்ளி.

அதுதான் அந்த சிவாலையத்தின் பெயர்.
விஜயநகர பேரரசர் வித்தியாதரனால் கட்டப்பட்ட இந்த ஆலையம் மற்ற சிவாலையங்களிலிருந்து தனித்து நிற்கிறது என்பது இதன் பெயரிலேயே ஓரளவு புரியும்.

ஏக இறைவனான ஈசன் என்று அழைக்கப்படும் பரமேஷ்வரனாகிய சிவபெறுமான், மற்ற ஆலையங்களைப் போன்று நின்ற கோலத்திலேயோ அல்லது லிங்கமாகவோ காட்சி தராமல், பரந்தாமன் என்று அழைக்கப்படும் ஸ்ரி விஷ்னுவைப் போன்று  சயன கோலத்தில் அதாவது படுத்துக்கொண்டு காட்சியளிக்கும் ஒரே தலம் இந்த ஸ்ரி பள்ளிக்கொண்டேஷ்வரர் திருத்தலம். இந்தியாவிலேயே ஏன் உளகிலேயே இந்த ஒரு இடத்தில்தான் சிவபெறுமான் சர்வ மங்கலாம்பிகை என்ற திருநாமம் பெற்ற பார்வதி தேவியின் மடியில் பள்ளிக்கொண்டிருக்கும் நிலையில் காட்சி தருவதால் அவர் ஸ்ரி பள்ளிக்கொண்டேஷ்வரர் என்றும், இந்த திருத்தலத்திற்கு ஸ்ரி பள்ளிக்கொண்டேஷ்வரர் திருத்தலம் என்றும் பெயர் வந்ததாம்.

எல்லாத் திருத்தலங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும். அதுபோல இந்தப் பள்ளிக்கொண்டேஷ்வரர் சிவாலையத்திற்கும் அதன் தல வரலாறு இருப்பதாகவும் அது சிவ புரானம் மற்றும் ஸ்கந்த புராணம் ஆகிய இரண்டு நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாக சொல்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது இந்த வரலாரு துர்வாச முனிவரிடம் இருந்து துவங்கி இருக்கிறது.

இந்திர லோகத்தை தன் வசம் வைத்துக்கொண்டிருந்த அதன் அதிபதியான இந்திரன் துர்வாச மகரிஷியின் சாபத்தால் அதன் பதவியை இழந்தானாம். விளைவு அவனது ராஜ்யம் அசுரர்களின் கையில் சென்றுவிட்டதாம். அசுரர்களை வென்று ராஜ்யத்தை பெறவேண்டுமென்றால் உடனே தேவர்கள் அனைவரும் பாற்கடலை கடைந்து அமுதுண்டு ஆற்றல் பெறவேண்டும் என்று அறிவுருத்தினாராம் தேவகுருவான பிரகஸ்பதி.

இதன் பொருட்டு சந்திரனை தூனாக கொண்டு, மந்திரமலையை மத்தாக கொண்டு, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு ஸ்ரி விஷ்னுவின் துணையோடு பாற்கடலை தேவர்கள் கடைய, அசுரர்களும் போட்டிபோட்டு கடைய, பாற்கடல் போர் கடலாகி இருந்ததாம். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் கயிறாக செயல்பட்டுக்கொண்டிருந்த அந்த வாசுகி என்ற பாவப்பட்ட பாம்பு தனது விஷத்தை கடலில் கக்கியதாம். அந்த பாற்கடல்விஷக் கடலாக மாறுவதன் தீவிரத்தை உணர்ந்த தேவர்களும் அசுரர்களும் அலரி அடித்துக்கொண்டு சிவனிடம் சென்றார்களாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூர் துறைமுகத்தில் உள்ள கடலில் எண்ணெய் கொட்டியபோது எங்கள் மக்கள் அந்த எண்ணேயை வாலியைவைத்தே வாரிய அதி நவின டெக்நாலஜி எல்லாம் அந்த காலத்து தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தெரியவில்லை போலும்.

சரி விஷையத்துக்கு வருவோம்.

நிலையின் தீவிரத்தை உணர்ந்த ஈசன், தனது நிழலில் இருந்து தோன்றிய சுந்தரர் என்பவரை அனுப்ப, அவரும் விஷமனைத்தையும் திரட்டி அதை ஒரு நாவல் பழம் போல கொண்டுவந்து சிவனிடம் சேர்த்தாராம். அந்த விஷத்தை வெளியில் வீசினால் உளகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் அழிந்துவிடும் என்று தேவர்கள் அச்சத்தில் அலர, அழிக்கும் தொழிலுக்கு அதிபதியான சிவபெறுமான் அகிலத்தைக் காப்பதற்காக, அந்த விஷத்தை தானே உண்டாராம்.

இதை கண்ட பரமசிவனின் பாதியான பார்வதி தேவி, அந்த சிவனின் உடலில் அந்த ஆலகாலவிஷம் பரவ கூடாதென்பதற்காக, அவரது தொண்டையில் கைவைத்து அந்த விஷத்தை அங்கேயே நிறுத்தினாராம். இதுவரையிலான கதை அநேகருக்கு தெரிந்திருக்கும். பிறகு அங்கிருந்து அவர்கள் கைலாயம் கிளம்பினார்களாம். அவ்வாறு கைலாயம் செல்லும் வழியில் நஞ்சுண்ட கலைப்பு நமச்சிவாயனை ஆட்கொள்ள, இடையில் தமது பயணத்தை நிறுத்தி பார்வதி தேவியின் மடியில் பள்ளிக்கொண்டாராம் பரமேஷ்வரன். அவ்வாறு பள்ளிக்கொண்ட இடம் சுருட்ட பள்ளி என்றும், அவ்வாறு அவர் பள்ளிக்கொண்டதால் பள்ளிக்கொண்டேஷ்வரர் என்றும் அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

அவ்வாறு அந்த ஆதி சிவன் அன்னைப் பார்வதி தேவியின் மடியில் மயங்கிய நிலையில் பள்ளிக்கொண்டிருந்த அந்தத் தருனத்தில் அவர் அந்த ஆலகால விஷத்தின் வீரியத்திலிருந்து மீண்டும் மீண்டு வந்துவிட அவரைச் சுற்றி அனைத்து தேவர்களும் ரிஷிகளும் பிராத்தனையில் ஈடுபட்டனராம். தவிர மாதத்தில் திரியோதசி திருதியில் இரண்டுமுறை வரும் பிரதோஷம் துவங்கிய இடமும் இந்த பள்ளிக்கொண்டேஷ்வரர் ஆலையம் தானாம். மேலும் எல்லா கடவுலர்களும் தத்தம் துணையுடன் இருக்கும் அறிய காட்சி இந்த கோயிலில்தான் கிடைக்கும். எல்லாக் கோவில்களிலும் தனியாகவே காட்சி அளிக்கும் தக்ஷனாமூர்த்தி கூட தனது துணை தாராவுடன் இருப்பது கூடுதல் சிறப்பு.

இப்படி எல்லா கடவுலர்களும் உள்ளே ஜோடியாக வீற்றிருக்க என்னையும் அர்ச்சனாவையும் வெளியே ஜோடியாக நிற்கவைத்திருந்தனர் எங்கள் உரவினர்கள். பாத பூஜை நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்திலிருந்த எங்களுக்கு அதை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார் புரோகிதர்.

கோயில்களில் திருமணங்கள் நடக்கும்போது உள்ளே பாதபூஜை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். அதனால் வெளியே வைத்துதான் செய்யவேண்டும். பொதுவாக பெண்ணுக்கு உடன்பிறந்த சகோதரந்தாண் மணமகனுக்கு பாதபூஜை செய்யவேண்டும். அவ்வாறு சகோதரர்கள் இல்லாத பட்சத்தில் மணப்பெண்ணுக்கு யார் அண்ணன் அல்லது தம்பி முறைக்கு பொருந்துகிறார்களோ அவர்களில் யாரேனும் ஒருவர் செய்யலாம்.

அர்ச்சனாவுக்கு சகோதரர்கள் கிடையாது. அதனால் என் தாய் மாமா விஜயகுமாரின் மகனான பிரசாந்தை அழைத்து எனக்கு பாதபூஜை செய்ய சொன்னார்கள். அதன்படி நான் இரண்டு கால்களையும் ஒரு தட்டில் வைத்து நின்றுகொண்டேன். அவன் முதலில் என் பாதங்களை பாலால் கழுவி பிறகு நீரால் கழுவி பிறகு மஞ்சள் பூசிவிட்டான்.

பாதபூஜை முடிந்தபின் எனது காலில் அணிவிக்கும்படி அவனிடம் கொடுக்கப்பட்ட மெட்டியை எனது காலில் அணிவித்தான். அதர்க்கு நான் அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினென். யாரோ என்னிடம் அந்த நேரத்தில் அவனுக்கு கொடுக்க சொல்லி எனது கையில் கொடுத்த பணத்தை அவன் கையில் கொடுத்துவிட்டிருந்தேன். ஐந்தே நிமிடத்தில் ஐநூறு ரூ அவனுக்கு.

பிறகு எனது பெற்றோரின் பாதங்களை நான் கழுவ வேண்டும். அதே ஃபார்முலாதான். எனது பெற்றொரின் பாதங்களை எப்படி கழுவவேண்டும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் இங்க ஊத்து அங்க ஊத்து என்று தேவையற்ற வாய்மொழிகள் சிலரிடமிருந்து. சரி அவர்களுக்கு தெரிந்த ஊளவியல் அவ்வளவுதான்.

பாதபூஜை செய்து முடித்தவுடன் எனது பெற்றோரும் எனக்கு ஏதோ கொடுத்தார்கள். ஆடை என்று நினைக்கிறேன். பிறகு அர்ச்சனா அவளது பெற்றோரது பாதங்களை கழுவினாள். அவளுக்கும் ஏதோ கொடுக்கப்பட்டது.

அங்கிருந்து எங்களை உள்ளே அழைத்து சென்றார்கள். மனை ஒன்று போடப்பட்டது. இருவரையும் ஒருவரின் பின் ஒருவராக அமரவைத்தார்கள். அர்ச்சனா எனது வலதுபக்கத்தில் அமர்ந்துகொண்டாள். புரோகிதர் தனது வேலையை தொடங்கினார். அர்ச்சனைக்காக எங்களது பெயரை கேட்டுக்கொண்டார்.

எங்களை சுற்றி உரவினர்கள் நின்று கொண்டிருந்தனர். தாலி கட்டவேண்டுமே என்ற பயம் எனக்கு மேலோங்கி இருந்தாலும், எங்களை சுற்றி நின்று கொண்டிருந்த உரவினர்களை கண்டு மிக சந்தோஷமாக இருந்தது எனக்கு. விமலா, ராதா, எனது பக்கத்திலேயே பாலாஜி அண்ணா, நந்தினி அக்கா, கஸ்தூரி மாமி, சத்தியா மாமி, பாலு மாமா, அண்ணி லோகேஸ்வரி, தேவி சித்தி, அந்த பக்கம் லலிதா மாமி, சற்று தூரத்தில் மற்றும் பலர் சூழ்ந்து இருந்தனர். உரவினர்களால் சூழப்பட்ட திருமணமாக என்னுடையது இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்பினேன். அது எனக்கு நடந்து கொண்டிருந்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

உளகிலேயே உன்னதமான விஷயம் நமக்காக ஒரு கூட்டம் கூடுவதுதான். அன்றைய அந்த கூட்டம் எனக்காகத்தான் கூடி இருக்கிறது என்று நினைக்கும்போது ஏதோபோல் இருந்தது அந்த மணமேடையில்.

மற்ற உரவினர்கள் சூழ்ந்து நிற்க மணமக்களின் பெற்றோர்கள் சற்று தொலைவில்தான் நிற்கவேண்டும்.  அதனாலேயே எங்களது பெற்றொர்கள் இரண்டாம் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

இதர்க்கு நடுவில் உள்ளே வந்தவுடனேயே பாலமரத்திலிருந்து எடுக்கப்பட்ட கொம்பிற்கு ஒரு ஐந்து பேர் கொண்ட குழு அபிஷேகம் செய்துவிட்டிருந்தது. அது ஒரு சம்பர்தாயம். அப்படி செய்யும்போது மணமக்களுக்கு புத்திர பாக்கியம் முதலான அனைத்தும் கிடைக்க பெறும் என்பது நம்பிக்கை. அந்த வேலையை முடித்த பிந்அனைவரும் எங்களை சூழ்ந்து நின்றனர். புரோகிதர் மந்திரங்களை சொல்லிக்கொண்டே ஒரு தேங்காயை கொடுத்து என்னை இரண்டு கைகளாலும் பிடித்திருக்க சொன்னார். அதனுடன் மஞ்சள் கொம்பும் இருந்ததாக ஞாபகம். அதைப் பிடித்து கொள்வதர்க்காக உரவினரின் அறிவுரையின்படி எனது இடது கையில் இருந்த அந்த பூச்செண்டை கீழே வைத்துவிட்டேன்.  திருமணத்தின்போது அவர்கள் சொன்னால்தான் கீழே வைக்கவேண்டும். அவர்கள் சொன்னால்தான் வைத்ததை எடுக்கவேண்டும். மணமக்கள் தாமாக எதுவும் செய்ய கூடாது.

பிறகு இருவரும் சேர்ந்து அந்த தேங்காயைப் பிடித்தோம். அந்த அட்சதைத் தட்டை பிடிக்க சொன்னார். பிடித்தோம். அரிசி எடுத்து போட சொன்னார். போட்டோம். ஆனால் எங்கிருந்து எதில் போட்டேன் என்றெல்லாம் நினைவில் இல்லை. பிறகு ஒரு கயிறை கையில் கொடுத்து அர்ச்சனாவின் கையில் கட்ட சொன்னார். தாலி மட்டுந்தானே கட்ட சொன்னார்கள்! இது ஔட் ஆஃப் சிலபஸ் ஆச்சே என்று யோசித்தேன். ஒருநொடிதாண். ”அவர சும்மா ஒரு முடிமட்டும் போட சொல்லுங்க மிச்சத்த நீங்க கட்டிடுங்கஎன்றார் புரோகிதர். அதன்படி நான் அர்ச்சனாவின் கையில் கயிறை சுற்றி வளைத்து ஒரு முடி போட மிச்சத்தை விமலா முடித்துவைத்தார். இதர்க்கிடையில் புரோகிதர் எங்களது பெயர்களை கேட்டுக்கொண்டு அவ்வப்போது ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து எனது தலையில் வெற்றிலை பாக்கு சீரகம் வெல்லம் ஆகியவற்றை வைத்தார்களாம். அந்த தொப்பி அணிந்திருந்ததால் எனக்கு அந்த உணர்வு ஏற்படவில்லை. அர்ச்சனாதான் சொன்னாள். அதுமட்டுமல்லாமல் திருமணத்தின்போது நடந்துகொண்டிருந்த சம்பர்தாயங்கள் சுற்றி நின்றவர்கள் பற்றி எல்லாம் அவளிடம் கேட்டுதாண் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவைப்பற்றி எனக்கு அந்த அளவிற்கு இப்போது நினைவில் இல்லை. தவிர அந்த நேரத்தில் ஒரு பரபரப்பான மனநிலையில்தான் இருந்தேண் நான். எனக்கு நேரடியாக நடந்த மற்றும் என்னை திருமணத்தின்போது செய்ய சொன்ன சடங்குகளை தவிர மற்றவற்றை எல்லாம் அர்ச்சனாவிடம்தான் கேட்டு இந்த பதிவின் இந்த அத்தியாயத்தையும் அடுத்த அத்தியாயத்தையும் எழுதுகிறேன். அவளும் புகைப்படங்களை பார்த்துவிட்டு நான் கேட்பதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். நலங்கு வைக்கும்போது எனக்கு இருந்த அந்த நிதானமான மனநிலை எனது திருமணம் நடந்துகொண்டிருந்தபோது இல்லை. அந்த தருனத்தின்போது நான் செய்த சில சடங்குகளை கூட அவள்தான் நினைவு படுத்திக்கொண்டிருந்தாள். ஏனென்றால் எனது அந்த மனநிலை அப்படி.

திடீரென்று ஒன்றை எடுக்க சொல்கிறார்கள். திடீரென்று ஒன்றை போட சொல்கிறார்கள். திடீரென்று கட்டச் சொல்கிறார்கள். திடீரென்று பிடிக்க சொல்கிறார்கள். திடீரென்று வைக்க சொல்கிறார்கள். இப்படி எல்லாமே திடீர் திடீரென்று நடக்க, என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அவளின் இடது பக்கம் அந்த மனையில் அமர்ந்துகொண்டிருந்தேன் நான். அவ்வாறு அமர்ந்து கொண்டிருந்தபோது பின்னால் இருந்த யாரோ ஒருவர் எனது தோள்பட்டையை திடீரென்று தட்டினார். என்னவென்று கேட்பதற்குள் திடீரென்று ஒரு வார்த்தை தட்டியவரிடமிருந்து.

”எழுந்திரு. தாலிகட்டனும்.”

3 comments:

  1. சிறப்பு. ஒரு கல்யானத்தை நேரில் பார்க்கும் அணுபவம். நன்றி உனக்கும் அர்ச்சனாவுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாந்தான் சொல்லவேண்டும். தொடர்ந்து படித்துக்கொண்டும் ஊக்குவித்துக்கொண்டும் அவ்வப்போது பின்னூட்டம் இட்டுக்கொண்டும் வருகிறீர்கள். ஒவ்வொரு பதிவு எழுதி முடிக்கும்போதும் யாரோ ஒருவர் கொடுக்கும் உத்வேகமும், வாழ்த்துக்களும், அறிவுரைகளும்தான் அடுத்த பதிவை எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. அதில் உங்களது பங்கு அளப்பரியது. மிக்க நன்றி அண்ணா.

      Delete
  2. ஹா ஹா ஃபினிஷிங் சூப்பர்.

    ReplyDelete

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube