18 March 2020



திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது எனது ஆசையல்ல அது ஒரு இலக்காகவே ஆகிப்போனது என்று நான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு காரணம் எனது எதிரில் நலங்கு வைக்க நின்று கொண்டிருந்த பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பெந்தான். அதற்கு முழூ காரணம் அவரில்லை என்றாலும் என்னைப்பொருத்தவரையில் அவரின் பங்கு அதில் மிக முக்கியமானது. மேலும் அந்தப் பெண்ணின் பெயரை இந்தப் பதிவில் குறிப்பிட விரும்பாததற்கு காரணம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் எதிர்காலமுமே. ஏனென்றால் அந்தப் பெண் என் வாழ்வின் ஒரு கசப்பான கடந்த காலம்.

வாருங்கள் அந்த வரலாற்றில் கொஞ்சம் பயணித்துவிட்டு வருவோம்.
உதாரனமாக, ஒரு பெண் ஒரு ஆணையோ, ஒரு ஆண் ஒரு பெண்ணையோ பெற்றோர் சம்மதமில்லாமல் காதலிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். பிறகு அவர்களின் பெற்றோகளின் சம்மதம் கிடைக்காமல் பிரிந்துவிடுகிறார்கள் என்றால் அது அந்த இருவரின் வாழ்க்கை, மனம் சம்மந்தப் பட்டது. அது அநேக இடங்களில் நடக்கும். ஒன்று அவர்களின் காதல் பக்குவப் படாமல் இருந்திருக்கலாம். அல்லது காதல் என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்ட உரவு சலித்து போயிருக்கலாம். அல்லது அவர்கள் மனதாலும் வயதாளும் பக்குவப்படாமல் இருந்திருக்கலாம். அல்லது பயந்திருக்கலாம். எதிர்த்து நிற்கும் திறன் இல்லாமல் இருந்திருக்கலாம். எதுவாய் இருந்தாலும் அது அவர்களின் மனம் சம்மந்தப்பட்டதாகிவிடுகிறது. ஆனால் எனது வாழ்க்கையில் நடந்தது எனது மானம் சம்மந்தப்பட்டதாகிப்போனது.

-----------

என்னை சிறு வயதிலிருந்தே ஏன், நான் பிறந்ததிலிருந்தே என்னை மிக நெருக்கமாக உற்றுநோக்கிக்கொண்டிருந்த ஒரு மிக நெருங்கிய சொந்தம் ஒன்று அண்ணனின் திருமணம் நிச்சையிக்கப்பட்ட பிறகு எனக்கும் அதே வீட்டில் இருந்து பெண் (அதாவது என் அண்ணியின் தங்கையை) தரவிருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், அக்டோபர் மாதம் 2017ல் எங்கள் வீடு தேடி வந்து,
பெரியவனுக்குதான் வெளியில போயிட்டீங்க, வினோத்துக்கு என் பொண்ணத்தான் கட்டனும்.” என்று மிகவும் உரிமையுடனும் உறுதியுடனும் அந்த பெண்ணின் அம்மா கேட்க எனது அப்பாவும் ஒருசில விவாதங்களுக்குப் பிறகு சரி என்று சொல்லிவிட்டார். அந்த திருப்பத்தை அந்தப் பெண்ணின் அம்மாவிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் அதேநபரிடம் ஒரு மாதத்திற்குமுன் எனது பெயரை உரவினர்கள் சிலர் பறிந்துரைக்க அந்த பெண்ணின் அம்மா கூறியது,
என் மகளுக்கு வருபவன் இவளுடைய கையை பிடிச்சுட்டு போகிரவனா இருக்கனும். அவனுடைய கயை இவ பிடிச்சுட்டு போகிரா மாதிரி இருக்கக்கூடாது.” என்றார். இப்படி ஒரு வசனத்தை கேட்ட அந்த உரவினர் முதல் என் வீட்டில் உள்ளோர்வரை அனைவரும் கொஞ்சம் உடைந்துதான் போனார்கள். ”வெணாம்னா வேணாம்னு சொல்லிடனும் அதுக்காக ஒரு கண்ணு தெரியாதவன இவ்வளவு கீழ் தரமா விமர்சிக்க கூடாது.” என்றார்கள் பலர். ஆனால் எனக்கு பெரிதாக ஒன்றும் வருத்தமில்லை. தனது பெண்ணை யாருக்கு கொடுக்கவேண்டும் என்ற சுதந்திரமும் உரிமையும் அதிகாரமும் அந்த பெண்ணின் அம்மாவிற்கு முழுதும் இருக்கிறது. முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுடையது. என்னை இவ்வளவு மோசமாக சொல்லி அவமானப்படுத்தியிருக்கிறார்களே என்ற வருத்தம் இருந்தாலும் என்னதான் நெருங்கிய உரவுமுறை என்றாலும், ஒரு பெண்ணை நல்ல பார்வையுள்ளவனுக்குதான் கொடுக்கவேண்டும் என்ற ஒரு தாயின் எண்ணத்தை நான் மதிப்புடந்தான் வரவேற்றேன். ஆனால் அந்த வார்த்தையை மட்டும் அவ்வப்போது நினைத்துக்கோண்டு சிரித்துக்கொள்வேன் நான். இப்படி ஒரு வசனத்தை பேசிவிட்டுதான் எனது வீடு தேடி வந்தார்கள் அவர்கள். அந்தப்பெண்ணின் அம்மாவிடம் அவர் பேசிய வார்த்தைகளையெல்லாம் மேற்கோள் காட்டிதான் நான் பேசினேன். ”எனக்கு பார்வை இல்லை. உங்க பொண்ணுதான் என் கைய பிடிச்சுட்டு நடக்குரமாதிரி இருக்கும்.” என்று அவர் வார்த்தைகளையே அவருக்கு சொன்னேன்.  இது சரியா வருமா என்று பலமுறை யோசித்துக்கொள்ளுங்கள் என்று நானும் அப்பாவும் சொன்னோம். ”நான் சின்ன வயசுல இருந்தே பாக்குரேன், எனக்கு ரெண்டு பேரும் ஒன்னுதான்.” என்றார் அந்தப் பெண்ணின் அம்மா. அவர் உறுதியுடன் இருந்ததால் அப்பா சரி பெரியவனின் திருமணத்திற்கு பின் இன்னொருமுறை முறைப்படி எல்லாவற்றையும் பேசிக்கொள்ளலாம் என்றார். ஆனால் உள்ளுக்குள் மட்டும் ஏதோ ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது எங்களுக்கு.

எல்லாவற்றிற்கும் மேலாக பெண்ணின் சம்மதமே பிரதானமானது என்பதால், என்னுடைய அப்பா, என் திருமனத்திற்கு முன்பு அர்ச்சனாவை எப்படி அழைத்து கேட்டாரோ, என்னை திருமணம் செய்தால் வரும் சாதக பாதகங்களை அர்ச்சனாவிடம் எப்படி சொல்லி விவரித்தாரோ, அதையேதான் அந்தப் பெண்ணிடமும் விளக்கினார். இரு பெற்றோர்களின் முன்னிலையிலும் அந்தப் பெண் சம்மதித்தார். ஆனால் ஒரே ஒரு வித்யாசம்தான். அர்ச்சனாவிடம் எங்கள்வீட்டு மொட்டைமாடியில் உரையாடல் நடந்தது. நான் அவளை ஹாலில் வைத்து குழப்பிக்கொண்டிருந்தேன். இந்தப்பெண்ணிடம் ஹாலில் உரையாடல் நடந்து முடிய நான் அப்படியே மொட்டைமாடிக்கு கூட்டிச் சென்று குழப்பினேன். நானும் சாதக பாதகங்களை சொன்னேன். ஆனால் இந்தப் பெண்ணுக்கு அதெல்லாம் அதிகம் தேவைப்படவில்லை. ஏனென்றால் இந்தப் பெண்ணுக்கு என்னை சிறு வயதிலிருந்தே தெரியும். ஒன்றாக பேசி, ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக விளையாடி, ஒன்றாக கடைவீதிக்குச் சென்று, ஒன்றாகத் திரும்பி, ஒருவருக்கொருவர் சண்டைப்போட்டுக்கொண்டு, ஒருவருடன் ஒருவர் சமாதானமாகிக்கொண்டு, என்னதான் அடிப்படையில் உரவினர்களாகவே இருந்தாலும். நாங்கள் இருவரும் கடைசி சில வருடங்களாக நண்பர்கள் போலத்தான் பழகிக்கொண்டிருந்தோம். அந்தப்பெண் மிகவும் வெளிப்படையாக என்னிடம் இருந்தார். வீட்டில் சொன்னால் அடிவிழும் என்பதால், தனது தாய் தந்தையரிடம் சொல்லாத சில ரகசியங்களைக் கூட என்னிடம் சொல்வார். எல்லாவற்றிற்கும் மேலாக பார்வையற்றவனாகிய என்னை உளவியல் ரீதியாகவும் நன்கு புரிந்திருந்தார். அப்படி சிறுவயதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிய உரவு ஒன்று சிதைந்து போயிருந்ததை நன்கு உணர்ந்தவனாய் அந்தப் பெண்ணின் முன்னால் நலங்கு வைத்துக்கொள்வதற்காக அமர்ந்து கொண்டிருந்தேன்.

---------

எல்லாரைப் போலவும் அந்தப் பெண்ணும் நலங்கு வைத்துவிட்டு அவர் கொண்டுவந்திருந்த பரிசுப்பொருட்களை ஒரு தட்டில் வைத்துஇந்தாங்க ( )” என்று சொல்லி எனது கையில் கொடுத்தார். நான் நன்றி என்றூ எனக்கே கேட்காதவாறு சொல்லிக்கொண்டு அதை பின்னால் நின்றுகொண்டிருந்தவர்களிடம் கொடுத்தேன்.

ஒருவழியாக இரண்டாவது நலங்கையும் முடித்திருந்தார்கள். வழக்கம்போல என்னை அந்த மனையை சுற்றிவர செய்தார்கள். இந்த முறை மாமாதான் அழைத்துச்சென்றார். என் வீடுதான் என்றாலும் வழியில் அநேக பொருட்களும் ஆட்களும் இருந்ததால் இன்னொருவருடன் வளம் வருவதாய் போயிற்று. மனையை சுற்றிய பின் பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட வைத்து, பழம் கொடுத்து, பால் கொடுத்து, அதற்கு முன்பு கொஞ்சம் இனிப்பு கொடுத்து சடங்குகளை முடித்துவைத்தார்கள். நானும் விருவிருவென்று எனக்கென ஒதுக்கப்பட்ட அறையின் உள்ளே சென்று காரமாய் ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

நேரம் கழிய வந்திருந்த உரவினர்கள் ஒவ்வொருவராய் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் டெங்குவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நிலவேம்பு கசாயமும் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அதை சிலருக்கு பாட்டிலில் ஊற்றி பார்சல் வேறு அனுப்பிக்கொண்டிருந்தார் என் அம்மா. ஆனால் எனக்கு மட்டும்நோஎன்ற உத்தரவு வந்ததாக கேள்விப் பட்டேன். காரணம் மனமகன் கசப்பான உணவுகள் எதையும் சாப்பிட கூடாதாம். ஒருவனுக்கு திருமணம் என்றால் இவர்கள் செய்யும் கொடுமைக்கு அளவே இருக்காது. பத்திரிக்கை அடித்தவுடன் அசைவம் சாப்பிட கூடாது என்பார்கள். துக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ள கூடாது என்பார்கள். மனமகன் கசப்பான எதையும் சாப்பிட கூடாது என்பார்கள். இதில் அசைவ உணவுகளுக்கு தடை என்பதை தவிர மற்ற எதையும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதுவும் துக்க நிகழ்வுகளில் திருமண வீட்டார் பங்கெடுக்க் கூடாது என்பது மனசாட்சியற்ற விதிமுறை என்றுதான் சொல்வேன் நான். அந்த விஷையத்தில் இன்றும் ஒருசில தீராத வருத்தம் உள்ளது எனக்கு.

செப்டம்பர் நான்காம்தேதி எனக்கும் அர்ச்சனாவிற்கும் நிச்சையம் முடிந்தது. திருமணத் தேதியையும் அறிவித்துவிட்டார்கள். அடுத்தநாள் வங்கிக்கு வந்தேன். அன்று வங்கி மேளாலரின் அம்மா தவறிவிட்டார் என்று சொன்னார்கள். சரி அன்றூமாலை அவர்களது இருதி சடங்கிற்கு நானும் போகலாம் என்று நினைத்தால் துக்க நிகழ்விற்கு வரக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் இப்படி ஒரு விதிமுறை இருப்பது எனக்கே தெரியும்.

அதாவது பரவாயில்லை. எனது சிறுவயதிலிருந்தே எனக்கு நன்கு பரிட்சையமான எங்கள் வீட்டிற்கு தினசரி பால் கொண்டுவந்து கொடுக்கும் சாந்தி அக்காவின் கனவர் எனது திருமணம் முடிந்து ஒரு நான்கு நாட்கள் கழித்து இறந்துவிட்டார். எங்கள் வீட்டில் இருந்து யாரும் போகவில்லை. திருமணம் முடிந்தும் கூட போகக் கூடாதா என்றால் மூன்று முறை மறு வீடு போய் வரும்வரை இம்மாதிரி நிகழ்வுகளில் பங்கெடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு மட்டும் பார்வை இருந்திருந்தால் திருட்டுத் தனமாக அந்த இருதி சடங்கில் பங்கெடுத்துவிட்டு வந்திருப்பேன். என்ன செய்ய? என்னால் ஆனதெல்லாம் அந்த நிலவேம்பு கசாயத்தை திருட்டுத் தனமாக குடிக்க இயன்றதுதான்.

முகூர்த்தகால் நாள் அன்று எல்லோருக்கும் பாட்டில்களில் அனுப்ப பட்டுக்கொண்டிருந்தபோதே நான் கேட்டதும் மேலிடத்திலிருந்து மறுப்புவர, நான் ரகசியமாக இந்த சம்பர்தாயத்தையெல்லாம் பெரிது படுத்தாத ஒருவரிடமிருந்து வாங்கி அந்த கசாயத்தைக் குடித்துவிட்டேன். திருமணத்திற்கு வருபவர்கள் முகூர்த்தகாலுக்கு வருபவர்கள் எல்லாம் நன்றாக இருக்கவேண்டுமாம். ஆனால் நான் மட்டும் மழைக்காலத்தில் எண்ணெய் நலங்கு வைத்துக் கொண்டு, சந்தன நலங்குகள் வைத்துக்கொண்டு, இனிப்பு, பால், பழம் அதுவும் மஞ்சள் வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு, திருமணநாள் அன்று முகூர்த்தத்தின்போதும், முதல் இரவின்போதும் மூக்கொழுகிக் கொண்டிருக்கவேண்டுமாம். நன்றாக இருக்கிறதல்லவா?

பெரும்பாலான உரவினர்கள் கிளம்பிவிட, அவர்கள் கொடுத்த ஆடைகளை வீட்டில் இருந்தவர்கள் போட்டு பார்க்கச் சொன்னார்கள். அப்படியே அந்த நாளும் கழிந்தது. இதற்கிடையில் அன்று காலை ஐந்துபேர் கொண்ட குழு ஒன்று தாலி வாங்கிக்கொண்டுவந்தது. அதை பார்த்துவிடவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பாவும் எனக்கு அதை ஒருமுறை காட்டிவிடவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தார். அடுத்தடுத்த வேலைகளால் அது மறுநாளைக்கு தள்ளிப்போனது. இதர்க்கிடையில் எங்களது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுருட்டப்பள்ளி கோயிலுக்கு எப்படி செல்வது என்ற விவாதம் உறங்கச் செல்லும் முன் கிளம்பியது. அனைவரும் காரில் (மகிழ்வுந்தில்) செல்லலாம் என்றுதான்  முடிவெடுத்திருந்தார்கள். அதை விவாதமாக்கியது நாந்தான். எத்தனைப் பேர் வந்தாலும் பரவாயில்லை. நாம் பேருந்திலேயே செல்வோம் என்றேன் நான். காரில் சென்றால் தேவையற்ற செலவு பிடிக்கும். அதுவே பேருந்தென்றால் குறைவான செலவில் சென்றுவிடலாம் என்றேன். மனமகன் பேருந்தில் எல்லாம் செல்லக் கூடாது என்றார்கள் சிலர். காரில்தாண் செல்லவேண்டுமாம். இதை முற்றிலும் மறுத்தேன் நான். திருமணம் முடிந்து வீட்டிற்கு வருவதென்றால் கார் அவசியம்தான். ஆனால் கோயிலுக்கு காரெல்லாம் தேவையில்லை. தவிர இத்தனைப் பேர்தான் வருவார்கள் என்று சரியாக கணிக்கவும் இயலாது. ஒருவேளை ஆட்கள் அதிகமாகவோ குறைவாகவோ வந்துவிட்டால் அதற்கேற்றபடி வண்டியையும் ஏற்பாடு செய்யவும் இயலாது. இங்கிருந்து வேப்பம்பட்டு மெயின்ரோட்டிற்கு இருசக்கர வாகனங்களில் சென்று கொள்ளலாம், அங்கிருந்து திருவள்ளூருக்கு ஷேர் ஆட்டோவில் ஆளுக்கு 15 ரூபாய், அங்கிருந்து சுருட்டப்பள்ளிக்கு 30 ரூபாய் என மொத்தமே ஒரு ஆளுக்கு 50 ரூபாயை தாண்டாது. நாமே அனைவருக்கும் செலுத்திக்கொள்ளலாம் என்று எனது முடிவில் மிக உறுதியாக இருந்தேன் நான். அம்மா மட்டும் கார்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு அந்த ஆடம்பரம் எல்லாம் தேவையில்லை என்றும், நான் அப்பாவுடன் பேருந்தில் வந்து கொள்கிறேன் என்றேன் தீர்க்கமாக. அப்படியே பத்து பேர் என்றாலும் நான் சொன்ன கணக்குப்படி 600 ரூபாய் பிடிக்கும். காரென்றால் ஒரு 200 ரூபாய்தான் அதிகம் செலவாகும் என்று அப்பா சொல்ல. இருதியில் காரையே உறுதி செய்தார்கள். உடனே அனைவரும் சென்று உறங்கினோம். அடுத்த சில நாட்களுக்கு எனக்கு தூக்கம் இருக்காது என நன்கு புரிந்ததால் நன்றாக உறங்க முயன்றேன்.

அக்டோபர் மாதம் 31 2019 அன்று காலை எழுந்ததும் கையைப் பார்த்தேன். அணிந்திருந்த பிரேஸ்ஸிலேட்டை காணவில்லை. அது கையில் இருப்பது அழகாக இருப்பதாக உரவினர்கள் கூறினார்கள். அழகாக இருந்தாலும் அது தளர்வாக இருந்தது. அதனாலேயே கையைவிட்டு அகன்றுவிட்டிருந்தது. ஏனோ அந்த நொடிப்பொழுதில் நான் பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பெண்ணின் நினைவும் உங்களுடன் நான் பகிர வேண்டிய எஞ்சிய வரலாரும் மின்னலெனத் தோன்றி மறைந்தன.

0 comments:

Post a Comment

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube